திமுகவின் மூத்த தலைவரும், ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் இந்த சோதனைகள், 2006-2011 காலகட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக எதிர்காலத்தில் நிலுவையிலுள்ள வழக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் தங்கியிருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சோதனை குறித்து அதிகாரிகள் தகவல் அளித்ததாகவும், அவரும் அதை சகஜமாக ஏற்று, அதிகாரிகளுடன் உரையாடியதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நேரத்தில் அமைச்சர் கூறியதாவது:
“இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென் மண்டலத்தில் கட்சிப் பணிகளை சிறப்பாக செய்து, திமுகவை வலிமையாக நிலைநிறுத்தியிருக்கோம். சட்டமன்றத் தேர்தல் அருகில்வரும்போது இப்படி சோதனையா? எங்களோட தேர்தல் வேலையை முடக்கத்தான் முயற்சி. ஆனால் நான் முன்பைப்போலவே செயல்படப் போகிறேன் – இல்லை, இன்னும் வேகமாக. முடங்கி போகமாட்டேன். நீங்க என்ன செய்யனுமோ செய்யலாம்… ஆகட்டும், பார்க்கலாம்!”
இதையடுத்து, அவரது வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக வட்டாரங்கள் இந்த சோதனையை அரசியலால் தூண்டப்பட்டது எனக் கண்டிக்கின்றன. சோதனைகள் எவ்வளவு நீடிக்கும் மற்றும் சட்டப்பூர்வ விளைவுகள் என்ன என்பதற்கான தெளிவு எதிர்காலத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
