திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே இயக்கப்படும் புதிய வாராந்திர ‘அம்ருத் பாரத்’ ரயில் சேவைக்கு மதுரை ரயில் நிலையத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் பூக்கள் தூவியும், கொடி அசைத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த புதிய ‘அம்ருத் பாரத்’ ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், தாம்பரத்திலிருந்து புதன்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.
மறு மார்க்கமாக, திருவனந்தபுரம் – தாம்பரம் (16122) ரயில் வியாழக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் டவுன் மற்றும் குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
ரயிலில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் மற்றும் ஒரு சமையல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ரயிலை ஆய்வு செய்தார். அவருடன் முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ஆர். சிவா, முதுநிலை கோட்ட பொறியாளர் வி. சூரியமூர்த்தி, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ், கூடுதல் கோட்ட மேலாளர் எல்.என். ராவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
