திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இன்று முக்கிய நீதிமன்ற அமர்வு

deepam_case.jpg

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, முருகன் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும். ஒன்பதாம் நாள் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை தீபம் பாரம்பரியமாக மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே ஏற்றப்பட்டு வந்தது. இதுவே பல ஆண்டுகளாக நடைபெறும் மரபாக தொடர்ந்த நிலையில், இவ்வாண்டு தீபம் எங்கு ஏற்றப்பட வேண்டும் என்ற விவகாரம் புதிய சர்ச்சைக்கு வழிவகுத்தது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று கூறி ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். “தீபத்தூண் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடம்; அதனால் அங்கேதான் தீபம் ஏற்றப்பட வேண்டும்” என்று அவர் வாதிட்டார். ஆனால் அந்த இடம் தர்கா பகுதியிற்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சென்றபோது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அரசு தரப்பின் எதிர்ப்பை ஏற்காமல், “தீபம் தீபத்தூணிலேயே ஏற்றப்பட வேண்டும்” என்று தெளிவான உத்தரவை வழங்கினார். எனினும், கார்த்திகை தீப நாளன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், முன்னையபடி உச்சி பிள்ளையார் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “CISF பாதுகாப்பு வழங்கும் நிலையில் மனுதாரரே மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்” என மீண்டும் உத்தரவிட்டது. மதுரை போலீசார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இந்த உத்தரவுக்குப் பிறகு பக்தர்கள் பெருமளவில் திரண்டு, தீபம் எப்போது ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் மாநில அரசு, “தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்று அறிவித்து அனுமதி மறுத்தது. மறுநாளே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டாலும் அது இதுவரை விசாரணைக்கு வராததால் நிலைமை மேலும் சிக்கலானது.

இந்நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை? என்ற கேள்வியை மையமாகக் கொண்டு, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த மனு, ராம ரவிக்குமார் தாக்கல் செய்த முக்கியமான வழக்குகளில் ஒன்றாகும். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எந்த திசையில் செல்லும் என்பது பக்தர்கள், அரசு மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியோரின் ஆவலை அதிகரித்துள்ளது.