ரூ.541 கோடி மதிப்பில் அமைந்த நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு தயாராகிறது

4way_road.jpg

தமிழகம் – கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டமான மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகளில், முதல் கட்டமாக திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணி வரும் டிசம்பர் 25-ம் தேதி திறக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரூ.541 கோடி மதிப்பில் 36 கி.மீ நெடுஞ்சாலை

கிட்டத்தட்ட ரூ.541 கோடி மதிப்பீட்டில், 36 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலைத் திட்டம் கடந்த 2023 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 92 சதவீதம் பணி நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், ஏற்கெனவே இருந்த சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ததுடன், வளைவான பகுதிகள் நேர்த்தியுடன் சீரமைக்கப்பட்டுள்ளன.

16 சுரங்கப் பாதைகள், போராட்டம் காரணமாக தாமதம்

மொத்தமாக 16 சுரங்கப் பாதைகள் (underpasses) அமைக்கப்படுகின்றன. இதில், ஆலம்பட்டி மற்றும் சுப்புலாபுரம் பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு காரணமாக சில பகுதிகளில் பணி தாமதமானது. தற்போது, அப்பகுதிகளிலும் 2 சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் – கேரளா இணைப்பு பலம் பெறும்

மொத்தமாக, இந்த நான்கு வழிச்சாலை திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் 129.92 கி.மீ தூரம் கொண்டதாகும். இதன் மூலம், பொருளாதார மையங்கள் இடையே இணைப்பு மேம்படுவதுடன், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா என்பனவும் மேம்படவுள்ளன.

டிசம்பர் 25ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

முதல் கட்டமாக திருமங்கலம் – வடுகப்பட்டி சாலை டிசம்பர் 25ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.