தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் அதிகம் கவரும் சுற்றுலாத் தலங்களைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் மதுரை 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. கோயில்கள், பாரம்பரிய விழாக்கள், வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் தலங்கள் மட்டுமின்றி உணவுச் சுற்றுலாவும் பயணிகளை ஈர்ப்பதால், கொரோனா காலத்துக்குப் பிறகு சரிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில் மதுரைக்கு 2.29 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வளர்ச்சியின் முக்கிய அம்சங்கள்
மதுரை, மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், காந்தி அருங்காட்சியகம், சமணர் மலைகள், யானைமலை
ஜல்லிக்கட்டு, சித்திரைத் திருவிழா, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், வரலாற்று நடைபயணங்கள், பழைய சந்தைகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
கறிதோசை, வெங்காயக்கறி, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், பன் பரோட்டா, பருத்திப்பால், முள்ளு முருங்கை வடை உள்ளிட்ட உணவுகள் சுற்றுலாப் பயணிகளிடையே அதிக வரவேற்பு
சமூக ஊடகக் காணொலிகள், உணவு மதிப்புரைகள், சுற்றுலா அனுபவப் பதிவுகள், சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகள்
அரசியல், ஆன்மிகம், வர்த்தகம், கலை மற்றும் பண்பாட்டின் முக்கிய மையமாக விளங்கும் மதுரை, பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. குறிப்பாக பொங்கல் கால ஜல்லிக்கட்டு மற்றும் சித்திரைத் திருவிழா போன்ற நிகழ்வுகள் ஆண்டுதோறும் பெருமளவிலான பயணிகளை ஈர்க்கின்றன. தற்போது மதுரையின் பாரம்பரிய உணவுகளைத் தேடி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில் 2 கோடியே 45 லட்சத்து 16 ஆயிரத்து 815 உள்நாட்டு மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரத்து 121 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வந்தனர். 2019-இல் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 57 ஆயிரத்து 527 ஆக உயர்ந்தது; வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 947 ஆக பதிவானது.
கொரோனா தாக்கத்தால் 2020-இல் மொத்த வருகை 1 கோடியே 39 லட்சத்து 58 ஆயிரத்து 605 ஆகக் குறைந்தது. 2021-இல் இது 99 லட்சத்து 33 ஆயிரத்து 861 ஆக மேலும் சரிந்தது. 2022-இல் 1 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரத்து 414 உள்நாட்டு மற்றும் 16 ஆயிரத்து 637 வெளிநாட்டுப் பயணிகள் வந்தனர். 2023-இல் 1 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 92 உள்நாட்டு மற்றும் 26 ஆயிரத்து 154 வெளிநாட்டுப் பயணிகள் வருகை பதிவானது.
அதன்பின் சுற்றுலா மீட்சி வேகமடைந்து, 2024-இல் 2.2 கோடியாகவும், 2025-இல் 2.29 கோடியாகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை உயர்ந்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் வருகையும் 57,564 என்ற அளவிலிருந்து 2024-ஆம் ஆண்டில் 98,770 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை தமிழகத்தின் முதலிட சுற்றுலா மாவட்டமாக உயர்த்தும் நோக்கில் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் துறையும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுற்றுலாத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
