மத்திய காவல் படையில் காவலராக தேர்வு ஆனதும், இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாக கூறி பணி வழங்க மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பணியாளரின் மருத்துவ நிராகரிப்பு அறிக்கையை ரத்து செய்து, மீண்டும் சோதனை செய்ய உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே. பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2023-ம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் BSF, CISF, CRPF ஆகிய மத்திய ஆயுதப்படை காவலர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்து, அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பின்னர், 07.10.2024 அன்று மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
அதில், அவரது இடது கையில் ‘கூடுதல் விரல்’ இருப்பதாக கூறி பணிக்குத் தகுதியற்றவர் என மதிப்பீடு செய்யப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனை அவர் எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.
மனுதாரர் வாதம்:
மத்திய உள்துறை 2021-ல் வெளியிட்ட திருத்தப்பட்ட மருத்துவ வழிகாட்டுதலின் படி, “சிறிய உடல் குறைபாடுகள் பணி திறனை பாதிக்காத நிலையில் இருந்தால், அரசு வேலை வாய்ப்பு மறுக்கக்கூடாது” எனத் தெரிகிறது.
மனுதாரருக்கு கூடுதல் விரல் இல்லை, எளிய கட்டை விரலாக மட்டுமே இருப்பதாகவும், அது பணி செயல்திறனில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் வாதிடப்பட்டது.
மத்திய அரசின் பதில்:
மத்திய அரசின் தரப்பில், கூடுதல் விரல் இருந்தால் ஆயுதங்களை கையாள்வதில் சிரமம் ஏற்படலாம் எனக் கூறி, பாதுகாப்பு துறையில் இது ஆபத்தானதாக இருக்கலாம் என்பதையே நிலைநாட்டினர். எனவே, மருத்துவ அறிவுரையின் அடிப்படையில் தேர்வு நிராகரிக்கப்பட்டது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதி உத்தரவு:
நீதிபதி விவேக் குமார் சிங் வழக்கை விசாரித்தபோது, பின்வருமாறு கூறினார்:
“மாற்றுத்திறன் என்பது கடவுளின் செயல். அதை மனித தவறாக கருத முடியாது.
அரசுப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம்.
பணி திறனை பாதிக்காத குறைபாடுகள் காரணமாக மருத்துவத் தகுதி மறுப்பு மனிதாபிமான ரீதியில் தவறானது.”
மனுதாரரின் உடல் குறைபாடு அவரது பணி திறனை பாதிப்பதில்லை என்பதால், அவரது மருத்துவ நிராகரிப்பு அறிக்கை ரத்து செய்யப்படுகின்றது. மேலும், அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
