கார்த்திகை தீபத்தின் புனித நொடி இந்த வருடம் திருடப்பட்டுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்காமல் வருவதாகவும் ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீர்ப்பு வழங்கப்படும் முன்பே காவல்துறையை குவித்து தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசின் நடவடிக்கை, இந்து சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீபம் ஏற்றுவதற்கு மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் இரண்டு முறை உத்தரவிட்டிருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தாத திமுக அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்ததுடன், தற்போது உச்சநீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பவன் கல்யாண் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆறு அறுபடை வீடுகளில் முதல்வீடு திருப்பரங்குன்றம். அங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்து மக்களின் பாரம்பரிய வழக்கம். ஆனால், அந்த வழிபாடு செய்யவும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமானது.
நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரும், தங்களது எளிய சடங்குகளை கூட இந்துக்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே கேள்விக்குறி. தீபத்தை தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக உறுதி செய்துள்ளது.
முதலில் தனி நீதிபதி, பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு — இரு தரப்பிலும் இந்துக்களின் உரிமை சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டது. இருந்தும், நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவது ஏன்?
இவ்வாறு வேறு எந்த மத நிகழ்ச்சியையும் தள்ளிப்போட முடியுமா? குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய புனித நிகழ்ச்சியை மாற்றி வேறு தேதியில் செய்யச் சொல்ல முடியுமா?”
அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, மத பாரம்பரியங்களை அசைக்கவும், கேலிச்செய்யவும் சிலருக்கு தைரியம் வருகிறது; ஆனால் இதே அணுகுமுறை மற்ற மதங்களுக்கு எதிராக நடக்காது. மத சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு உரிமையே புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பவன் கல்யாண் இறுதியில், “இனி ஒன்றுபடாவிட்டால் இந்து என்ற உணர்வையே நாம் இழந்துவிடுவோம். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, காமாக்யா முதல் துவாரகா வரை — இந்துக்கள் எழும் நாள் வரும்,” என பதிவை முடித்துள்ளார்.
