இன்று முதல் புதிய நடை அட்டவணை – பக்தர்கள் கவனத்திற்கு

மீனாட்சியம்மன் கோவில்

மார்கழி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (டிசம்பர் 16) முதல் நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தின் ஆன்மீக சிறப்பை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சிறப்பு பூஜைகள் மற்றும் புதிய நேர அட்டவணையை அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் திருவிழாக்களும், வழிபாட்டு நிகழ்ச்சிகளும் இடைவிடாது நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் புனிதத் தலமாக திகழ்கிறது.

மார்கழி பிறப்பை முன்னிட்டு, டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை தினமும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற உள்ளன. அதிகாலை நேரத்தில் திருஞானசம்பந்தர் சன்னதியில் திருஞானபால் வழங்கும் சடங்கு நடைபெறும்.

இதனை முன்னிட்டு, கோவில் வெளிக்கோபுர கதவுகள் தினமும் காலை 3.30 மணிக்கே திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • உச்சிக்கால பூஜைக்கு பின் நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும்
  • மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்
  • இரவு 9 மணிக்கு பல்லாக்கு புறப்பு மற்றும் பூஜைகள் நடைபெறும்
  • இரவு 9.30 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நிறைவடைந்து, கோவில் நடை சாத்தப்படும்

மார்கழி மாதத்தின் புனித பூஜைகளை பக்தர்கள் சிறப்பாக அனுபவிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.