மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் விசாரணை நிறைவு

madurai_high_court.jpg

மதுரை திருப்பரங்குன்றம் மலையுச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் தொடர்பான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில், நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது. மேலும், தனி நீதிபதி விசாரித்து வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பு வழங்குவதற்கான தேதி குறிப்பிடாமல், வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.