தை மாதப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழர் பாரம்பரிய விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் புகழ்பெற்றவையாக கருதப்படுகின்றன. இதைத் தவிர, பல கிராமங்களில் மஞ்சுவிரட்டு, மாடு பிடித்தல் போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் ஒழுங்குமுறையுடன், பாதுகாப்பாக மற்றும் சட்ட விதிகளுக்கு இணங்க நடைபெற வேண்டும் என்பதற்காக, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- மாவட்ட ஆட்சியரின் முன்கூட்டிய அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எந்த போட்டியும் நடத்தக்கூடாது.
- விலங்கு வதை தடுப்புச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளுக்கு இணங்க மட்டுமே போட்டிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
- முன் அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.
- காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
- காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம்.
- ஜல்லிக்கட்டு நடத்த தொடர்புடைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட வேண்டும்.
- போட்டியில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு மற்றும் புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- போட்டி நடைபெறுவதற்கு முன்பே அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போது காப்பீட்டு ஆவணங்களை இணைப்பது கட்டாயம்.
- ஜல்லிக்கட்டுடன் தொடர்பு இல்லாத இடங்களில் போட்டி நடத்தக் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
- விதிமீறல்கள் மற்றும் குழப்பங்களை தவிர்க்க, செக் லிஸ்ட் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
- போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- காயமடையும் காளைகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
- போட்டி களத்துக்குள் பார்வையாளர்கள், வெளிநபர்கள் மற்றும் வீரர்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இதனை உறுதி செய்வது காவல் துறையின் பொறுப்பு.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பாகவும், சட்டபூர்வமாகவும் நடைபெறுவதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
