Stalin

திமுக பொதுக்குழு கூட்டத்திற்காக மதுரை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஆளும் திமுக கட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்கள் திரண்டுள்ளனர். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் திசையைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய கூட்டமாக இது கருதப்படுகிறது.

இக்கூட்டம் மதுரையில் உள்ள பெரியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட சுமார் 10,000 பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் மட்டும் 6,500 பேர் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு மதுரையில் தரையிறங்கினார். அவரை வரவேற்க, அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி. டி.ஆர். பாலு, மற்றும் பல மாவட்ட தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு தரப்பில், மதுரை கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோரும் வரவேற்பில் பங்கேற்றனர்.

தொண்டர்கள் வழங்கிய வேஷ்டி மற்றும் சால்வையை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, இன்று மாலை நடைபெறவுள்ள ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு அவனியாபுரத்திலிருந்து ஆரப்பாளையம்திருமலை நாயக்கர் சிலை வரை, 22 கி.மீ. தூரத்தில் நடைபெற உள்ளது. இதன் முடிவில், முன்னாள் மேயர் முத்து சிலையை ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலையொட்டி பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் வெளியிலும் நிலவுகிறது.