மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

thevar_jeyanthi.jpg

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி மற்றும் 63-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை காலை முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தேவரின் உருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொனில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி–குருபூஜை விழா, கடந்த 28ஆம் தேதி ஓதுவார் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கியது. விழா மூன்று நாட்களாக அரசு அளவில் நடைபெற்று வருகிறது.

முதல்வரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சாலை வழியாக புறப்பட்டுச் சென்றார். தமிழக முதல்வர் வருகையையொட்டி, போலீசார் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.