மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில், ஏற்கெனவே பதவி வகித்து வந்த பழைய உறுப்பினர்களையே தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் அறங்காவலர் குழுத் தலைவராக தேர்வாக உள்ளார்.
உலகப் புகழ்பெற்ற இந்த கோயிலின் தக்காராக கடந்த 18 ஆண்டுகள் பணியாற்றிய கருமுத்து தி. கண்ணன் மறைவுக்குப் பிறகு, தற்காலிகமாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி தக்காராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2023 நவம்பர் மாதம் ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்ற நிலையில், அவர்கள் டிசம்பர் மாதம் பதவியேற்றனர். பின்னர், ருக்மணி பழனிவேல்ராஜன் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்றார்.
தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய நியமனம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த பலரும் அறங்காவலர் பதவிக்கு முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே இருந்த அறங்காவலர்களின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், பழைய அறங்காவலர் குழுவே தொடர்வதுடன், ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
