காமராஜபுரம் வழி தூசி தாக்கம் – அலர்ஜி, மூச்சுத் திணறல் அதிகரிப்பு

Dust_Polluction.jpg

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர்.

திருமங்கலம் காமராஜபுரத்தில் இருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை, தேவர் சிலை அருகே தொடங்கி மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணியின் போது சாலையில் இருந்த தார் அகற்றப்பட்டதால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் தூசு கிளம்பி பரவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, காமராஜபுரம் மற்றும் கற்பகநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் தூசி மண்டலத்தால் அலர்ஜி, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்கள், மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்கவும், தூசி பரவாமல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.