Fly over

பழங்காநத்தம்–ஜெய்ஹிந்த்புரம் பாலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நனவானது!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பழங்காநத்தம் – ஜெய்ஹிந்த்புரம் உயர் நிலைப் பாலம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ரூ.68.38 கோடியில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த திட்டம் முதலில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம், டி.வி.எஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்வே கடவுப்பாதையை கடக்கும் 1,082 மீட்டர் நீளமான ‘Y’ வடிவில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. முதற்கட்டமாக பழங்காநத்தம்–டி.வி.எஸ். நகர் பகுதி பணி முடிக்கப்பட்டது.

ஆனால் 2011-ஆம் ஆண்டு அட்சி மாற்றத்தையடுத்து, பாலத்தின் ஜெய்ஹிந்த்புரம் இணைப்பு பணி இடைநிறுத்தப்பட்டது. பின்னர் திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பணிகள் மீண்டும் தொடங்கி, முழுமையான திட்டத்திற்கு ரூ.68.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் பழங்காநத்தம் சுரங்கப் பாதை மூடப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்று தற்போது முடிக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திறக்கப்பட்ட இந்த உயர் நிலைப் பாலம், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் வாகனப் பேரணி வழித்தடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.