மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவின் கொடியேற்றம் புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தை மாதம் பௌர்ணமி நாளில் நடைபெறும் தெப்பத் திருவிழா, நிகழாண்டில் ஜனவரி 21ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.05 மணிக்குமேல் 10.29 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:
- 6ஆம் நாள் (ஜன.26): சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
- 8ஆம் நாள் (ஜன.28): மச்சகந்தியார் திருமணக் காட்சி
- 9ஆம் நாள் (ஜன.29): சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமி புறப்பாடு
- 10ஆம் நாள் (ஜன.30): தெப்பம் முட்டுத்தள்ளுதல்
- 11ஆம் நாள் (ஜன.31): கதிரறுப்புத் திருவிழா
முக்கிய தெப்பத் திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை, சுவாமி பிரியாவிடையுடனும் அம்மன் தனியாகவும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வண்டியூர் தெப்பக்குளம் முன்புள்ள முக்தீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.
அங்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுக்குப் பிறகு, தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தெப்பம் முற்பகலில் இரண்டு முறையும், இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஒரு முறையும் சுற்றி வலம் வரும். பின்னர் நள்ளிரவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வார்கள்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தியாகராஜன், கோயில் இணை ஆணையர் நா. சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
