மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவையொட்டி, தெப்பக் குளத்தில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் தெப்பத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் 7-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை, யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்திகேசுவரர் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) நடைபெறவுள்ளது. இதையொட்டி, தெப்பக் குளத்தில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 300-க்கும் மேற்பட்ட தகர உருளைகள் மற்றும் நூற்றுக்கணக்கான கம்புகளைப் பயன்படுத்தி மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அலங்காரத் தட்டிகள் பொருத்துதல், மின்விளக்கு அலங்காரங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. வருகிற இரண்டு நாட்களில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணி நிறைவடையும் என்றும், அதன் பின்னர் அலங்காரப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
