செல்லூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் இளைஞர்களுக்கான விளையாட்டு வளாகம்

Sellur_Updates.png

மதுரை மாநகராட்சி சார்பில் செல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் ‘மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்’ அமைக்கும் பணிகள் தொடங்கப்படுகின்றன.

செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, கபடி சிலை ரவுண்டானா அருகே ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நவீன மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் சித்ராவின் முயற்சியினால், மாநகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.5 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு வளாகத்தில் வாலிபால், இறகுப்பந்து, கிரிக்கெட் நெட் பயிற்சி, கோகோ, சிலம்பம், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான வசதிகள் அமைக்கப்படுவதுடன், சிறப்பு ஜிம் வசதியும் நடைப்பயிற்சிக்கான டிராக்குகளும் உருவாக்கப்பட உள்ளன.
இந்த முயற்சி செல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.