மதுரை ஆவினில் உள்ள ஆரப்பாளையம், பீபீ குளம், அண்ணாநகர் மண்டல அலுவலகங்களில் விற்பனை செய்யப்பட்ட பால் மற்றும் ஆவின் பொருட்களுக்கான ரூ.35.50 லட்சம் பணம் கடந்த ஓராண்டாக மைய அலுவலகத்தில் வரவு வைக்கப்படாமல் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, புதிதாக பொறுப்பேற்ற பொதுமேலாளர் முத்துமாதவன் உத்தரவின்பேரில், உதவி பொதுமேலாளர் (கணக்கு) தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை விவரங்கள்
மதுரை ஆவின், சாத்தமங்கலம் மைய அலுவலகம், ஆரப்பாளையம், பீபீ குளம், அண்ணாநகர் மண்டல அலுவலகங்கள்
விற்பனை பணம் மைய அலுவலகத்தில் செலுத்தப்படாதது, ரூ.35.50 லட்சம் முறைகேடு, கணக்குகளில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள்
சில்லரை விற்பனையாளர்கள் ரொக்கமாக பணம் செலுத்தி பொருட்களை வாங்குவது, மண்டல அலுவலகங்களில் வசூலிக்கப்படும் தொகை முறையாக வரவு வைக்கப்பட வேண்டிய நடைமுறை
பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை, கடந்த ஓராண்டுக்கான பணப் பரிவர்த்தனைகள் ஆய்வில் உள்ளன, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்களிடம் விசாரணை தொடர்கிறது
மதுரை சாத்தமங்கலத்தில் ஆவின் மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் அண்ணாநகர், பீபீ குளம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அரசு அலுவலர்களான கண்காணிப்பாளர்கள் இந்த அலுவலகங்களின் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆவின் சில்லரை விற்பனையாளர்கள் தங்களுக்கு தேவையான பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மண்டல அலுவலகங்களில் இருந்து வாங்கிச் செல்கின்றனர். அதற்கான தொகையை அவர்கள் ரொக்கமாக செலுத்துகின்றனர்.
மண்டல அலுவலகங்களில் பொருட்கள் விற்பனை மூலம் வசூலாகும் பணம், உரிய கணக்கில் பதிவு செய்யப்பட்டு சாத்தமங்கலத்தில் உள்ள மைய அலுவலகத்தில் செலுத்தப்படுவது நடைமுறையாகும். ஆனால், ஆரப்பாளையம், பீபீ குளம், அண்ணாநகர் ஆகிய மூன்று மண்டல அலுவலகங்களில் வசூலிக்கப்பட்ட தொகையில் ரூ.35.50 லட்சம் கடந்த ஓராண்டாக மைய அலுவலகத்தில் வரவு வைக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார் கடிதங்கள் புதிதாக பொறுப்பேற்ற பொதுமேலாளர் முத்துமாதவனிடம் அளிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, புகாரின் உண்மைத் தன்மையை கண்டறிய உதவி பொதுமேலாளர் (கணக்கு) தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. குழுவினர் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் கணக்குகள், விற்பனை விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அங்கு பணியாற்றும் கண்காணிப்பாளர்களிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் முறைகேட்டின் முழு விவரங்களும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறைகேடு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது விதிமுறைப்படி குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
