24 மணி நேர சர்வதேச சேவையுடன் புது தோற்றத்தில் மதுரை விமான நிலையம்

Madurai_Airport.jpg

மதுரை விமான நிலையத்தில் புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ATC Tower) ரூ.88 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு, வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் அருகே அமைந்துள்ள மதுரை விமான நிலையம், தென் மாவட்ட மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த விமான நிலையம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, 24 மணி நேர சேவையுடன் இயங்கிவருகிறது.

இங்கு தற்போது துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாட்டு சேவைகளுடன், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளும் இயங்குகின்றன. சமீபத்தில் பயணிகளின் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் 3-ம் தரநிலையிலிருந்து 2-ம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது.

மேலும், கூடுதல் விமான சேவைகளை இயக்கும் நோக்கில், விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் முக்கியமானது, 2021-ல் தொடங்கிய புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணி. ரூ.88 கோடி நிதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கோபுரம் தற்போது முழுமையாக முடிவடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இதன் செயல்பாட்டால் மதுரை விமான நிலையத்தின் சேவைத்திறன் மேலும் உயர்ந்து, பயணிகளுக்கான அனுபவமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.