ஜனவரி 14 மற்றும் 17-ல் நடைபெறும் பொங்கல் விழாவிற்கு சுற்றுலா பயணிகளை அழைக்கும் மதுரை

Madurai_Updates

மதுரை மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு, தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

முதல் நாள் – ஜனவரி 14

ஜனவரி 14-ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்திலிருந்து தனி சிறப்பு பேருந்து மூலம் சுற்றுலா பயணிகள் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கிராமம் அழைத்துச் செல்லப்படுவர்.

அங்கு,

  • கிராம மக்கள் தமிழர் பாரம்பரிய முறையில் சுற்றுலா பயணிகளை வரவேற்பது
  • மாட்டுவண்டி ஊர்வலம்
  • கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைக்கும் நிகழ்வு
  • சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் பரிமாறுதல்

ஆகியவை நடைபெறுகின்றன. இதனுடன், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், தமிழக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியனவும் இடம்பெறுகின்றன.

இரண்டாம் நாள் – ஜனவரி 17

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜனவரி 17-ம் தேதி காலை 10 மணியளவில், மதுரை சுற்றுலா அலுவலகத்திலிருந்து அரசு தனி சிறப்பு பேருந்து மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அங்கு, நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாதுகாப்புடன் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்

இந்த இரு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,

  • பெயர்
  • பாஸ்போர்ட் நகல்

ஆகிய விவரங்களுடன் எண் 1, மேலவெளி வீதி, மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்பு எண்கள்:
0452-2334757
9176995868

மின்னஞ்சல்:
touristofficemadurai@gmail.com

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.