அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் பி. மூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு போட்டிகள் மேலும் சிறப்பாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஜனவரி 17-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்றார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 16-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வழக்கமாக சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பாமக மற்றும் விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் டிராக்டர் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். எந்தவித பிரச்சினையுமின்றி போட்டிகள் நடைபெற தேவையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் வெங்கடேசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
