மதுரை மாவட்ட வளர்ச்சியை முன்னெடுக்க, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறு புதிய முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் குறைப்பு முதல் ஏரிகள், கால்வாய்கள், சாலைகள் மேம்பாடு வரை பல்வேறு துறைகளில் செயல்திறன் மிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
1. போக்குவரத்து நெரிசல் குறைக்கும் புதிய சாலை – ₹130 கோடி
வைகை ஆற்றின் வடகரையில் விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலை ₹130 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. இது மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும்.
2. பழைய பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றம்
மீனாட்சியம்மன் கோயில் நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், அண்ணா நகர், புதூர், தெற்குவாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பழைய சாக்கடை குழாய்கள் அகற்றி புதிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
3. உத்தங்குடி உபரிநீர் கால்வாயில் தடுப்புச் சுவர் – ₹7 கோடி
மதுரை கிழக்கு பகுதியில் உள்ள உத்தங்குடி உபரி நீர்க்கால்வாயில் ₹7 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்பு சுவர் கட்டப்படும்.
4. கண்மாய் புனரமைப்பு & புதிய தடுப்பணை – ₹12.10 கோடி
மேலூர் வட்டத்தில் கேசம்பட்டி, பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதனைச் சார்ந்த கண்மாய்கள் ₹2.60 கோடியில் புனரமைக்கப்படுகின்றன. சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே ₹9.50 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
5. ஏரிகள் மற்றும் கால்வாய்கள் மேம்பாடு – ₹10 கோடி
கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ₹10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகின்றன.
6. மதுரை முக்கிய சாலைகள் மேம்பாடு – ₹150 கோடி
வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள
- சாத்தையார் அணை–வைகாசிப்பட்டி சாலை
- முடுவார்பட்டி–சல்வார்பட்டி சாலை
- பாலமேடு–வேம்பரலை சாலை
இவற்றை மேம்படுத்த ₹150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
