டிரெண்டிங் செய்திகள்

10ம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியீடு வாட்ஸ்அப் மூலம் தேர்வு முடிவை அறியும் வசதி

10th_result.jpg

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 94.31% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள், உரிய நேரத்தில் முடிவுகளை வெளியிட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஆங்கிலம் 99.44% பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழ் 98.43%, அறிவியல் 98%, சமூக அறிவியல் 97.93% மற்றும் கணிதம் 97.36% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை 2வது இடம், தஞ்சாவூர் 3வது இடம், திருச்சி 4வது இடம் மற்றும் கன்னியாகுமரி 5வது இடம் பெற்றுள்ளன.

மொத்தமாக 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவியர் 4,19,891 பேர் தேர்ச்சி பெற்று 96.47% தேர்ச்சி விகிதம் பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் 4,01,214 பேர் தேர்ச்சி பெற்று 92.15% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.32% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 0.51% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி வாரியாக பார்க்கும்போது தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14% தேர்ச்சி விகிதத்துடன் முன்னிலையில் உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34% மற்றும் அரசுப் பள்ளிகள் 91.86% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களில் அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்கள் சாதித்துள்ளனர். கணிதத்தில் 3,194 மாணவர்கள், சமூக அறிவியலில் 3,336 மாணவர்கள், ஆங்கிலத்தில் 92 மாணவர்கள் மற்றும் தமிழில் 34 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் தேர்வு முடிவுகளை அறியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் நேரடியாக வாட்ஸ்அப்பில் பெற முடியும். தேர்வர்கள் அந்த எண்ணை தொடர்புகளில் சேமித்து வைத்து, “Hi” என அனுப்பி, பின்னர் Directorate of Government Examinations மற்றும் வகுப்பை தேர்வு செய்து, தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.