அஜித்குமாரின் மரணம் விசாரணை தீவிரம், குடும்பத்துக்கு அரசு உதவி

ajith_kumar_issue.jpg

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையின் கீழ், இன்று திருப்புவனத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு நிவாரண உதவிகள்:

அஜித்குமாரின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் பல உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு ஆவின் நிர்வாகத்தில் டெக்னீசியன் வேலை வழங்கப்பட்டது.
  • குடும்பத்துக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
  • திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது.

இந்த உதவிகளை தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி மற்றும் பல உள்ளாட்சி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்தார்.