ரூ.50 கோடி மதிப்பில் மாற்றம் பெறும் வண்டியூர் கண்மாய் பூங்கா

Vandiyur_update.jpg

ரூ.50 கோடி மதிப்பில் நவீன சுற்றுலா பூங்கா – அடுத்த மாதம் திறப்பு

மதுரை வண்டியூர் கண்மாய், ‘குட்டி மெரினா’ கடற்கரை போல மாறி வருகிறது. ரூ.50 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்த நவீன பூங்காவில் தனித்தீவு, படகு சவாரி, நடைபாதை, உடற்பயிற்சிக் கூடம், யோகா மண்டபம், குழந்தைகள் விளையாட்டரங்கம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட மேம்பாட்டு பணிகள் முடிவடைந்து வருவதால், அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில், காந்தி அருங்காட்சியகம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் வெளியூர் பயணிகளால் நிரம்பி வழிந்தாலும், உள்ளூர் மக்களுக்கு தினசரி பொழுதுபோக்கிற்கு மால்கள் மற்றும் திரையரங்குகளைத் தவிர பெரிய திறந்தவெளி இடங்கள் இல்லாத நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த குறையை போக்கும் வகையில், மதுரை மாநகராட்சி சார்பில் 450 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருக்கும் வண்டியூர் கண்மாய் பூங்காவை சுற்றுலா தலமாக மாற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கண்மாயைச் சுற்றி 3.2 கி.மீ. நீள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை அனுபவத்தை நினைவூட்டும் வகையில் கரைகளில் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, குளிர்ந்த காற்றை ரசித்து அமர பொதுமக்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கண்மாயின் மையத்தில் சிறிய தீவு உருவாக்கப்பட்டு, மிதக்கும் ரப்பர் பாலம் மூலம் நடைபயணமாகவும், படகு சவாரி மூலமாகவும் தீவிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1982-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டின்போது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி, படகு போக்குவரத்துடன் கூடிய சிறந்த பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். அந்த தொலைநோக்கு திட்டம், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மாநகராட்சி ஆணையர் சித்ராவின் நடவடிக்கையால், திட்டத்தின் சுமார் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

கண்மாயில் தேங்கி நின்ற ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு, நீர் சுத்திகரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக உடற்பயிற்சிக் கூடம், பெரியவர்களுக்காக யோகா மண்டபம் அமைக்கப்படுகிறது. நவீன கழிப்பறைகள், பாதுகாப்பான நடைபாதைகள் மற்றும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங், சைக்கிளிங் செல்ல தனி டிராக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்மாய் கரைகள் மற்றும் நடைபயிற்சி பாதைகள் முழுவதும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களிலும் பாதுகாப்பாக பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, பிப்ரவரி மாதத்தில் பூங்காவை திறக்கும் வகையில் இறுதிப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சித்ரா விரைவுபடுத்தியுள்ளார்.

நுழைவு வாயில்கள் மற்றும் வாகன நிறுத்த வசதி

வண்டியூர் பூங்காவிற்கு பழம் மார்க்கெட் எதிர்புறம் மற்றும் சுந்தரம் பூங்கா பழைய நுழைவு வாயில் என இரண்டு பிரதான நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் பயன்பாட்டிற்காக கே.கே.நகர் என்ஃபீல்டு ஷோரூம் மற்றும் ஹோண்டா ஷோரூம் அருகில் இரண்டு பிரத்யேக நுழைவு வாயில்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கண்மாயின் கிழக்குப் பகுதியில் பாண்டி கோயில் சுற்றுச்சாலையில் அலங்கார வளைவுடன் கூடிய திறந்தவெளி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியிலும் பொதுமக்கள் பூங்காவிற்கு வரலாம். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு லேக் வியூ சாலை மற்றும் பாண்டி கோயில் அருகிலுள்ள சுற்றுச்சாலையில் தனி வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முழுமையடைந்ததும், வண்டியூர் கண்மாய் பூங்கா மதுரை மக்களின் தினசரி ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் குடும்ப பொழுதுபோக்கிற்கான முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.