திருப்பரங்குன்றம் மலையில் விதிக்கப்பட்டிருந்த தடையை சுமார் 20 நாட்களுக்குப் பிறகு தளர்த்தி, நிபந்தனைகளுடன் பக்தர்கள் மலைமேல் செல்ல போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
முருகனின் முதல் படைவீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை இருமுறை உத்தரவிட்டிருந்த போதிலும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அரசு தரப்பில் தீபம் ஏற்றப்படவில்லை. மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவும் தீபத்தூணும் அருகருகே இருப்பதால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மலையிறங்கும் பிரதான வழியான பழனியாண்டவர் கோவில் தெரு நுழைவுவாசல் இரும்புத் தடுப்புகளால் மூடப்பட்டு, அதேபோல் மலை படிக்கட்டு பாதையும் அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மலைமேல் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பழனியாண்டவர் கோவிலைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வெளியே செல்வதற்கும் வீடு திரும்புவதற்கும் சிரமம் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மலைக்கு செல்லும் தடை தொடர்ந்தது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஜனவரி 6-ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 20-ம் தேதி தர்கா சுத்தம் செய்ய நான்கு இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அகல்விளக்குகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றம் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் சசிபிரியா மற்றும் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் ஆகியோர் மலை படிக்கட்டு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலைமேல் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மலைக்கு செல்லும் பக்தர்கள், பெயர், ஆதார் விவரம், செல்போன் எண் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பழனியாண்டவர் கோவில் தெரு மற்றும் கோட்டைத்தெரு நுழைவுப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டன.
சுமார் 20 நாட்களுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் மலைமேல் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…